JER

Jeremiah 49

IRV

அம்மோன் மக்களைக்குறித்த செய்தி

1அம்மோன் மக்களைக்குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இஸ்ரவேலுக்கு மகன்கள் இல்லையோ? அவனுக்குச் சந்ததி இல்லையோ? அவர்கள் ராஜா காத்தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டு, அதின் மக்கள் இவன் பட்டணங்களில் ஏன் குடியிருக்கவேண்டும்? 2ஆகையால், இதோ, நாட்கள் வருமென்று யெகோவா சொல்லுகிறார், அப்பொழுது அம்மோன் மக்களின் பட்டணமாகிய ரப்பாவில் போரின் ஆர்ப்பரிப்பைக் கேட்கச்செய்வேன்; அது பாழான மண்மேடாகும்; அதை சுற்றியுள்ள ஊர்களும் நெருப்பால் சுட்டெரிக்கப்படும்; ஆனாலும் இஸ்ரவேல் தன் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொண்டவர்களின் தேசத்தைச் சொந்தமாக்கிக்கொள்ளும் என்று யெகோவா சொல்லுகிறார். 3எஸ்போனே, அலறு; ஆயி அழிக்கப்பட்டது; ரப்பாவின் மகள்களே, ஓலமிடுங்கள்; சணலாடையை உடுத்திக்கொண்டு, புலம்பி, வேலிகளில் சுற்றித்திரியுங்கள்; அவர்கள் ராஜா அதின் ஆசாரியர்களுடனும் அதின் பிரபுக்களுடனும் சிறைப்பட்டுப்போவான். 4எனக்கு விரோதமாய் வருகிறவன் யார் என்று சொல்லி, உன் செல்வத்தை நம்பின ஒழுக்கம் கெட்ட மகளே, நீ பள்ளத்தாக்குகளைப்பற்றிப் பெருமைபாராட்டுவானேன்? உன் பள்ளத்தாக்குக் கரைந்து போகிறது. 5இதோ, உன் சுற்றியுள்ள அனைவராலும் உன்மேல் பயத்தை வரச்செய்வேன் என்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் சொல்லுகிறார்; நீங்கள் அவரவர் தம்தம் முன் இருக்கும் வழியிலே துரத்தப்படுவீர்கள்; ஓடுகிறவர்களை திரும்பச் சேர்ப்பார் ஒருவருமில்லை. 6அதற்குப்பின்பு அம்மோன் புத்திரருடைய சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

ஏதோமைக்குறித்த செய்தி

7ஏதோமைக்குறித்துச் சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: தேமானில் இனி ஞானமில்லையோ? ஆலோசனை விவேகிகளைவிட்டு அழிந்ததோ? அவர்களுடைய ஞானம் கெட்டுப்போயிற்றோ? 8தேதானின் குடிகளே, ஓடுங்கள், முதுகைக் காட்டுங்கள், பள்ளங்களில் பதுங்குங்கள்; ஏசாவை விசாரிக்கும் காலத்தில் அவன் ஆபத்தை அவன்மேல் வரச்செய்வேன். 9திராட்சைப்பழங்களை அறுக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தார்கள் என்றால், பின்பறிக்கிறதற்குக் கொஞ்சம் வைக்கமாட்டார்களோ? இரவில் திருடர் வந்தார்கள் என்றால், தங்களுக்குப் போதுமென்கிறவரை கொள்ளையடிப்பார்கள் அல்லவோ? 10நானோ ஏசாவை வெறுமையாக்கி, அவன் ஒளித்துக்கொள்ளமுடியாமல் அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்திவிடுவேன்; அவனுடைய சந்ததியாரும் அவனுடைய சகோதரரும் அவனுடைய அயலாரும் அழிக்கப்படுவார்கள்; அவன் இனி இருக்கமாட்டான். 11திக்கற்றவர்களாகப்போகும் உன் பிள்ளைகளை ஒப்புவி, நான் அவர்களை உயிருடன் காப்பாற்றுவேன்; உன் விதவைகள் என்னை நம்புவார்களாக. 12யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, பாத்திரத்தில் குடிக்கவேண்டுமென்கிற நியாயத்தீர்ப்புக்கு உள்ளாகாதவர்கள் அதில் குடித்தார்கள்; நீ குற்றமற்று நீங்கலாயிருப்பாயோ? நீ நீங்கலாயிராமல் அதில் கண்டிப்பாகக் குடிப்பாய். 13போஸ்றா பாழும் நிந்தையும் அவாந்தரமும் சாபமுமாக இருக்குமென்றும், அதின் பட்டணங்கள் எல்லாம் நித்திய வனாந்திரங்களாயிருக்குமென்றும் என்னைக்கொண்டு வாக்குக்கொடுத்தேன் என்று யெகோவா சொல்லுகிறார். 14நீங்கள் கூடிக்கொண்டு, அதற்கு விரோதமாக வந்து, போர் செய்கிறதற்கு எழும்புங்கள் என்று சொல்ல, தேசங்களிடத்தில் பிரதிநிதியை அனுப்புகிற செய்தியைக் யெகோவாவிடத்தில் கேள்விப்பட்டேன். 15இதோ, உன்னை மக்களுக்குள்ளே சிறியதும், மனிதருக்குள்ளே அசட்டை செய்யப்பட்டதுமாக்குகிறேன் என்கிறார். 16கன்மலை வெடிப்புகளில் குடியிருந்து, மேடுகளின் உச்சியைப் பிடித்திருக்கிற உன்னால் உன் பயங்கரமும் உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கியது; நீ கழுகைப்போல உயரத்தில் உன் கூட்டைக் கட்டினாலும் அங்கேயிருந்து உன்னை விழச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். 17அப்படியே ஏதோம் பாழாகும்; அதைக் கடந்துபோகிறவன் எவனும் அதின் எல்லா வாதைகளைப்பார்த்து அதிர்ந்து சத்தம் போடுவான். 18சோதோமும் கொமோராவும் அவைகளின் சுற்றுப்புறங்களும் கவிழ்க்கப்பட்டதுபோல இதுவும் கவிழ்க்கப்படும் என்று யெகோவா சொல்லுகிறார்; அங்கே ஒருவனும் குடியிருப்பதில்லை, அதில் ஒரு மனுமக்களும் தங்குவதில்லை. 19இதோ, புரண்டு ஓடுகிற யோர்தானிடத்திலிருந்து சிங்கம் வருவதுபோல் பலவானுடைய தாபரத்திற்கு விரோதமாக வருகிறான்; அவனைச் சடிதியில் அங்கேயிருந்து ஓடிவரச்செய்வேன்; நான் அதற்கு விரோதமாய்க் கட்டளையிட்டு அனுப்பத் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? எனக்குச் சமமானவன் யார்? எனக்கு எதிராக நிற்கிறவன் யார்? எனக்கு முன்பாக நிலைநிற்கப்போகிற மேய்ப்பன் யார்? 20ஆகையால் யெகோவா ஏதோமுக்கு விரோதமாக யோசித்த ஆலோசனையையும், அவர் தேமானின் குடிகளுக்கு விரோதமாக நினைத்திருக்கிற நினைவுகளையும் கேளுங்கள்; மந்தையில் சிறியவர்கள் மெய்யாகவே அவர்களைப் பிடித்து இழுப்பார்கள், அவர்கள் இருக்கிற இருப்பிடங்களை அவர் மெய்யாகவே அழிப்பார் 21அவைகளுக்குள் இடிந்துவிழும் சத்தத்தினால் பூமி அதிரும்; கூக்குரலின் சத்தம் சிவந்த சமுத்திரம்வரை கேட்கப்படும். 22இதோ, ஒருவன் கழுகைப்போல எழும்பி, பறந்துவந்து, தன் இறக்கைகளைப் போஸ்றாவின்மேல் விரிப்பான்; அந்நாளில் ஏதோமுடைய பராக்கிரமசாலிகளின் இருதயம் பிரசவவேதனைப்படுகிற பெண்ணின் இருதயம்போல இருக்கும் என்கிறார்.

தமஸ்குவைக்குறித்த செய்தி

23தமஸ்குவைக்குறித்துச் சொல்வது: ஆமாத்தும் அர்பாத்தும் கலங்குகிறது; பொல்லாத செய்தியை அவர்கள் கேட்டதினால் கரைந்துபோகிறார்கள்; கடலோரங்களில் வருத்தமுண்டு; அதற்கு அமைதலில்லை. 24தமஸ்கு சோர்ந்துபோகும், பின்வாங்கி ஓடிப்போகும்; பயம் அதைப் பிடித்தது; பிரசவ பெண்ணைப்போல இடுக்கமும் வேதனைகளும் அதைப் பிடித்தது. 25சந்தோஷமான என் ஊராகிய அந்தப் புகழ்ச்சியுள்ள நகரம் காப்பாற்றப்படாமல் போனதே! 26ஆதலால் அதின் வாலிபர் அதின் வீதிகளில் விழுந்து, போர் வீரர்கள் எல்லோரும் அந்நாளில் அழிக்கப்படுவார்கள் என்று சேனைகளின் யெகோவா சொல்லுகிறார். 27தமஸ்குவின் மதில்களில் தீக்கொளுத்துவேன்; அது பெனாதாத்தின் அரண்மனைகளை எரிக்கும் என்கிறார்.

கேதாரையும் காத்சோரையும்குறித்த செய்தி

28பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் முறியடிக்கும் கேதாரையும் ஆத்சோருடைய இராஜ்ஜியங்களையும் குறித்துக் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: எழும்பி, கேதாருக்கு விரோதமாகப் போய், கீழ்த்திசை மக்களை அழியுங்கள். 29அவர்களுடைய கூடாரங்களையும் அவர்களுடைய மந்தைகளையும் வாங்கி, அவர்களுடைய திரைகளையும் அவர்களுடைய எல்லாத் தட்டுமுட்டுகளையும் அவர்களுடைய ஒட்டகங்களையும் தங்களுக்கென்று கொண்டுபோய், எங்கும் பயம் என்று சொல்லி, அவர்கள்மேல் ஆர்ப்பரிப்பார்கள். 30ஆத்சோரின் குடிகளே, ஓடி, தூரத்தில் அலையுங்கள்; பள்ளத்தில் ஒதுங்கிப் பதுங்குங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; பாபிலோன் ராஜாவாகிய நேபுகாத்நேச்சார் உங்களுக்கு விரோதமாக ஆலோசனைசெய்து, உங்களை அழிக்கத் திட்டமிட்டிருக்கிறான். 31பயமில்லாமல் அலட்சியமாகக் குடியிருக்கிற தேசங்களுக்கு விரோதமாக எழும்பிப்போங்கள் என்று யெகோவா சொல்லுகிறார்; அதற்கு வாசல்களுமில்லை, தாழ்ப்பாள்களுமில்லை; அவர்கள் தனிப்படத் தங்கியிருக்கிறார்கள். 32அவர்களுடைய ஒட்டகங்கள் கொள்ளையும், அவர்களுடைய ஆடுமாடுகளின் ஏராளம் சூறையாகும்; நான் அவர்களை எல்லாத் திசைகளின் கடைசி மூலைகளில் இருக்கிறவர்களிடத்திற்குச் சிதறடித்துவிட்டு, அதினுடைய எல்லாப் பக்கங்களிலுமிருந்து அவர்களுக்கு ஆபத்தை வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார். 33ஆத்சோர் வலுசர்ப்பங்களின் தங்குமிடமாகி, என்றென்றைக்கும் பாழாய்க்கிடக்கும்; ஒருவனும் அங்கே குடியிருப்பதில்லை, ஒரு மனிதனும் அதில் தங்குவதுமில்லையென்கிறார்.

ஏலாமைக்குறித்த செய்தி

34யூதா ராஜாவாகிய சிதேக்கியாவினுடைய ஆட்சியின் துவக்கத்தில், ஏலாமுக்கு விரோதமாக எரேமியா என்னும் தீர்க்கதரிசிக்கு உண்டான யெகோவாவுடைய வசனம்: 35சேனைகளின் யெகோவா சொல்லுகிறது என்னவென்றால்: இதோ, நான் ஏலாமின் வில்லென்னும் அவர்களுடைய முதன்மையான வல்லமையை முறித்துப்போட்டு, 36வானத்தின் நான்கு திசைகளிலுமிருந்து நான்கு காற்றுகளை ஏலாமின்மேல் வரச்செய்து, அவர்களை இந்த எல்லாத்திசைகளிலும் சிதறடிப்பேன்; ஏலாம் தேசத்திலிருந்து துரத்தப்பட்டவர்கள் எல்லா தேசங்களிலும் சிதறப்படுவார்கள். 37நான் ஏலாமியரை அவர்கள் எதிரிகளுக்கு முன்பாகவும், அவர்கள் உயிரை வாங்கத் தேடுகிறவர்களுக்கு முன்பாகவும் கலங்கச்செய்து, என் கோபத்தின் கடுமையாகிய தீங்கை அவர்கள்மேல் வரச்செய்வேன் என்று யெகோவா சொல்லுகிறார்; நான் அவர்களை அழிக்கும்வரை பட்டயத்தை அவர்களுக்குப் பின்னாக அனுப்பி, 38என் சிங்காசனத்தை ஏலாமில் வைத்து, அங்கேயிருந்து ராஜாவையும் பிரபுக்களையும் அழித்துப்போடுவேன் என்று யெகோவா சொல்லுகிறார். 39ஆனாலும் கடைசி நாட்களில் நான் ஏலாமின் சிறையிருப்பைத் திருப்புவேன் என்று யெகோவா சொல்லுகிறார்.

Matthew Henry's chapter overview

Introduction

Jeremiah 49

The cup of trembling still goes round, and the nations must all drink of it, according to the instructions given to Jeremiah, Jer 25:15. This chapter puts it into the hands, I. Of the Ammonites (Jer 49:1-6). II. Of the Edomites (v. 7-22). III. Of the Syrians (Jer 49:23-27). IV. Of the Kedarenes, and the kingdoms of Hazor (Jer 49:28-33). V. Of the Elamites (Jer 49:34-39). When Israel was scarcely saved where shall all these appear?

Cross-references: Jer 25:15 · Jer 49:1 · Jer 49:23 · Jer 49:28 · Jer 49:34