Genesis 31
IRV
யாக்கோபு லாபானை விட்டு ஓடிப்போகுதல்
1பின்பு, லாபானுடைய மகன்கள்: “எங்கள் தகப்பனுக்கு உண்டானவைகள் அனைத்தையும் யாக்கோபு எடுத்துக்கொண்டான்” என்றும், எங்கள் தகப்பனுடைய பொருட்களினாலே இந்த செல்வத்தையெல்லாம் அடைந்தான் என்றும் சொன்ன வார்த்தைகளை யாக்கோபு கேட்டான். 2லாபானின் முகத்தை யாக்கோபு பார்த்தபோது, அது நேற்று முந்தையநாள் இருந்ததுபோல இல்லாமல் வேறுபட்டிருந்ததைக் கண்டான். 3யெகோவா யாக்கோபை நோக்கி: “உன் பிதாக்களுடைய தேசத்திற்கும் உன் இனத்தாரிடத்திற்கும் நீ திரும்பிப் போ; நான் உன்னோடுகூட இருப்பேன்” என்றார். 4அப்பொழுது யாக்கோபு, ராகேலையும் லேயாளையும் வெளியிலே தன் மந்தையினிடத்திற்கு வரவழைத்து, 5அவர்களை நோக்கி “உங்கள் தகப்பனுடைய முகம் நேற்று முந்தையநாள் இருந்ததுபோல இருக்கவில்லை என்று எனக்குத் தோன்றுகிறது; ஆனாலும் என் தகப்பனுடைய தேவன் என்னோடுகூட இருக்கிறார்”. 6என்னால் முடிந்தவரை நான் உங்களுடைய தகப்பனுக்கு வேலை செய்தேன் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். 7உங்கள் தகப்பனோ, என்னை ஏமாற்றி, என் சம்பளத்தைப் பத்துமுறை மாற்றினான்; ஆனாலும் அவன் எனக்குத் தீங்குசெய்ய தேவன் அவனுக்கு இடம்கொடுக்கவில்லை. 8புள்ளியுள்ளவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் புள்ளியுள்ள குட்டிகளைப் போட்டது; கலப்புநிறமானவைகள் உன் சம்பளமாயிருக்கும் என்று அவன் சொன்னபோது, ஆடுகளெல்லாம் கலப்பு நிறக் குட்டிகளைப் போட்டது. 9இந்த விதமாகத் தேவன் உங்கள் தகப்பனுடைய ஆடுகளை எடுத்து, எனக்குத் தந்தார். 10ஆடுகள் சினையாகும்போது, நான் கண்ட கனவில் என் கண்களை ஏறெடுத்துப் பார்க்கும்போது, ஆடுகளோடு இணையும் கடாக்கள் கலப்புநிறமும் புள்ளியும் வரியும் உள்ளவைகளாயிருக்கக் கண்டேன். 11அன்றியும் தேவதூதன் ஒருவர் கனவில்: யாக்கோபே என்றார்; இதோ, இருக்கிறேன் என்றேன். 12அப்பொழுது அவர்: உன் கண்களை ஏறெடுத்துப்பார்; ஆடுகளோடு இணையும் கடாக்களெல்லாம் கலப்புநிறமும் புள்ளியும் வரியுமுள்ளவைகளாக இருக்கிறது; லாபான் உனக்குச் செய்கிற அனைத்தையும் கண்டேன். 13நீ தூணுக்கு அபிஷேகம் செய்து, எனக்கு ஒரு பொருத்தனையைச் செய்த பெத்தேலிலே உனக்குக் காட்சியளித்த தேவன் நானே; இப்பொழுது நீ எழுந்து, இந்த தேசத்தைவிட்டுப் புறப்பட்டு, உன் இனத்தார் இருக்கிற தேசத்திற்குத் திரும்பிப்போ என்று சொன்னார் என்றான். 14அதற்கு ராகேலும் லேயாளும்: “எங்கள் தகப்பனுடைய வீட்டிலே இனி எங்களுக்குப் பங்கும் சொத்தும் உண்டோ? 15அவரால் நாங்கள் அந்நியராக கருதப்படவில்லையா? அவர் எங்களை விற்று, எங்களுடைய பணத்தையும் அபகரித்துக்கொண்டார். 16ஆகையால் தேவன் எங்கள் தகப்பனிடத்திலிருந்து எடுத்த ஐசுவரியம் எல்லாம் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் உரியது; இப்படியிருக்க, தேவன் உமக்குச் சொன்னபடியெல்லாம் செய்யும்” என்றார்கள். 17அப்பொழுது யாக்கோபு எழுந்து, தன்னுடைய பிள்ளைகளையும், மனைவிகளையும் ஒட்டகங்கள்மேல் ஏற்றி, 18பதான் அராமிலே தான் சம்பாதித்த மிருகஜீவன்களாகிய மந்தைகள் அனைத்தையும் தன் பொருட்கள் எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு, கானான் தேசத்தில் இருக்கிற தன் தகப்பனாகிய ஈசாக்கிடம் போகப் புறப்பட்டான். 19லாபான், தன் ஆடுகளை மயிர்கத்தரிக்கப் போயிருந்தான்; அந்த சமயத்திலே ராகேல் தன் தகப்பனுடைய வீட்டிலிருந்த சிலைகளைத் திருடிக்கொண்டாள். 20யாக்கோபு தான் ஓடிப்போகிறதை சீரியனாகிய லாபானுக்குத் தெரிவிக்காமல், திருட்டுத்தனமாகப் போய்விட்டான். 21இப்படியே அவன் தனக்கு உண்டானவைகளையெல்லாம் எடுத்துக்கொண்டு, ஆற்றைக் கடந்து, கீலேயாத் மலையை நோக்கி ஓடிப்போனான்.
லாபான் யாக்கோபைப் பின்தொடருதல்
22யாக்கோபு ஓடிப்போனது மூன்றாம் நாளிலே லாபானுக்கு தெரிவிக்கப்பட்டது. 23அப்பொழுது அவன், தன் சகோதரர்களைக் கூட்டிக்கொண்டு, ஏழுநாட்கள் அவனைத் தொடர்ந்துபோய் பிரயாணம் செய்து, கீலேயாத் மலையிலே அவனைக் கண்டுபிடித்தான். 24அன்று இரவு தேவன் சீரியா தேசத்தானாகிய லாபானுக்குக் கனவில் தோன்றி: “நீ யாக்கோபோடு நன்மையைத் தவிர தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாக இரு” என்றார். 25லாபான் யாக்கோபினிடத்தில் வந்தான்; யாக்கோபு தன் கூடாரத்தை மலையிலே போட்டிருந்தான்; லாபானும் தன் சகோதரர்களோடுகூடக் கீலேயாத் மலையிலே கூடாரம் போட்டான். 26அப்பொழுது லாபான் யாக்கோபை நோக்கி: “நீ திருட்டுத்தனமாகப் புறப்பட்டு, என் மகள்களை யுத்தத்தில் பிடித்த கைதிகளைப்போலக் கொண்டுவந்தது என்ன செயல்? 27நீ ஓடிப்போவதை எனக்குத் தெரிவிக்காமல், திருட்டுத்தனமாக என்னிடத்திலிருந்து வந்துவிட்டது என்ன? நான் உன்னை சந்தோஷமாக சங்கீதம், மேளதாளம், கின்னரமுழக்கத்துடனே அனுப்புவேனே. 28என் பிள்ளைகளையும் என் மகள்களையும் நான் முத்தம் செய்யவிடாமல் போனதென்ன? இந்தச் செயலை நீ அறிவில்லாமல் செய்தாய். 29உங்களுக்குப் பொல்லாப்புச்செய்ய எனக்கு வல்லமை உண்டு; ஆகிலும், உங்கள் தகப்பனுடைய தேவன்: நீ யாக்கோபோடு நன்மையைத் தவிர தீமை ஒன்றும் பேசாதபடி எச்சரிக்கையாக இரு என்று நேற்று இரவில் என்னோடு சொன்னார். 30இப்பொழுதும் உன் தகப்பனுடைய வீட்டின்மேலுள்ள ஏக்கத்தால் நீ புறப்பட்டுப்போகிறதானால் போகலாம், என் தெய்வங்களை ஏன் திருடிக்கொண்டு போகிறாய்” என்று கேட்டான். 31யாக்கோபு லாபானுக்கு மறுமொழியாக: “உம்முடைய மகள்களைப் பலாத்காரமாகப் பிடித்து வைத்துக்கொள்வீர் என்று நான் பயப்பட்டதாலே இப்படி வந்துவிட்டேன். 32ஆனாலும் யாரிடத்தில் உம்முடைய தெய்வங்களைக் கண்டுபிடிக்கிறீரோ, அவனை உயிரோடு விடவேண்டாம்; உம்முடைய பொருட்கள் ஏதாவது என்னிடத்தில் இருக்குமானால் நீர் அதை நம்முடைய சகோதரர்களுக்கு முன்பாகத் தேடிப்பார்த்து, அதை எடுத்துக்கொள்ளும்” என்றான். ராகேல் அவைகளைத் திருடிக்கொண்டு வந்தது யாக்கோபுக்குத் தெரியாது. 33அப்பொழுது லாபான் யாக்கோபின் கூடாரத்திலும், லேயாளின் கூடாரத்திலும், இரண்டு வேலைக்காரிகளின் கூடாரத்திலும் தேடிப் பார்த்தும் ஒன்றும் கண்டுபிடிக்கவில்லை; பின்பு, லேயாளின் கூடாரத்தைவிட்டு ராகேலின் கூடாரத்திற்குப் போனான். 34ராகேல் அந்தச் சிலைகளை எடுத்து, ஒட்டகச் சேணத்தின்கீழ் வைத்து, அதின்மேல் உட்கார்ந்திருந்தாள். லாபான், கூடாரம் முழுவதிலும் தேடிப்பார்த்தும், அவைகளைக் கண்டுபிடிக்கவில்லை. 35அவள் தன் தகப்பனை நோக்கி: “என் ஆண்டவனாகிய உமக்கு முன்பாக நான் எழுந்திருக்காததைக்குறித்துக் கோபப்பட வேண்டாம்; பெண்களுக்குரிய வழிபாடு எனக்கு உண்டாயிருக்கிறது” என்றாள்; அப்படியே அவன் அந்தச் சிலைகளைத் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. 36அப்பொழுது யாக்கோபுக்குக் கோபம் எழும்பி, லாபானோடு வாக்குவாதம்செய்து: “நீர் என்னை இவ்வளவு தீவிரமாகத் தொடர்ந்துவர நான் செய்த தவறு என்ன? நான் செய்த துரோகம் என்ன? 37என் தட்டுமுட்டுகளையெல்லாம் தேடிப்பார்த்தீரே; உம்முடைய வீட்டுத் தட்டுமுட்டுகளில் என்னத்தைக் கண்டுபிடித்தீர்? அதை என்னுடைய சகோதரர்களுக்கும் உம்முடைய சகோதரர்களுக்கும் முன்பாக இங்கே வையும்; அவர்கள் எனக்கும் உமக்கும் நியாயம் தீர்க்கட்டும். 38இந்த இருபது வருடகாலமாக நான் உம்மிடத்தில் இருந்தேன்; உம்முடைய செம்மறியாடுகளும் வெள்ளாடுகளும் சினை அழியவில்லை; உம்முடைய மந்தையின் கடாக்களை நான் சாப்பிடவில்லை. 39காயப்பட்டதை நான் உம்மிடம் கொண்டுவராமல், அதற்காக நான் உத்திரவாதம்செய்தேன்; பகலில் திருடப்பட்டதையும், இரவில் திருடப்பட்டதையும் என் கையில் கேட்டு வாங்கினீர். 40பகலிலே வெயிலும் இரவிலே குளிரும் என்னைத் தாக்கியது; தூக்கம் என் கண்களுக்குத் தூரமாயிருந்தது; இந்த விதமாகப் பாடுபட்டேன். 41இந்த இருபது வருடகாலம் உம்முடைய வீட்டிலே இருந்தேன்; பதினான்கு வருடங்கள் உம்முடைய இரண்டு மகள்களுக்காகவும், ஆறு வருடங்கள் உம்முடைய மந்தைக்காகவும் உம்மிடத்தில் வேலைசெய்தேன்; பத்துமுறை என் சம்பளத்தை மாற்றினீர். 42என் பிதாவின் தேவனாகிய ஆபிரகாமின் தேவனும் ஈசாக்கின் பயபக்திக்குரியவரும் என்னோடு இல்லாவிட்டால், நீர் இப்பொழுது என்னை வெறுமையாக அனுப்பிவிட்டிருப்பீர்; தேவன் என் சிறுமையையும் என் கடின உழைப்பையும் பார்த்து, நேற்று இரவு உம்மைக் கடிந்துகொண்டார்” என்று சொன்னான்.
லாபான் யாக்கோபு உடன்படிக்கை செய்துகொள்ளுதல்
43அப்பொழுது லாபான் யாக்கோபுக்குப் மறுமொழியாக: “இந்த மகள்கள் என் மகள்கள், இந்தப் பிள்ளைகள் என் பிள்ளைகள், இந்த மந்தை என் மந்தை; நீ காண்கிற அனைத்தும் என்னுடையவைகள்; என் மகள்களாகிய இவர்களையும், இவர்கள் பெற்ற பிள்ளைகளையும் இன்று நான் என்ன செய்யமுடியும்? 44இப்பொழுதும் எனக்கும் உனக்கும் சாட்சியாயிருப்பதற்காக, நீயும் நானும் உடன்படிக்கை செய்துகொள்ளலாம்” என்றான். 45அப்பொழுது யாக்கோபு ஒரு கல்லை எடுத்து, அதைத் தூணாக நிறுத்தினான். 46பின்னும் யாக்கோபு தன் சகோதரர்களைப் பார்த்து, “கற்களைக் குவியலாகச் சேருங்கள்” என்றான்; அவர்கள் கற்களை எடுத்துக்கொண்டுவந்து, ஒரு குவியலாக்கி, அந்தக் குவியலின்மேல் உணவருந்தினார்கள். 47லாபான் அதற்கு ஜெகர்சகதூதா என்று பெயரிட்டான்; யாக்கோபு அதற்குக் கலயெத் என்று பெயரிட்டான். 48“இந்தக் குவியல் இன்று எனக்கும் உனக்கும் சாட்சி என்று லாபான் சொன்னதால், அதின் பெயர் கலயெத் எனப்பட்டது. 49அல்லாமலும் அவன்: “நாம் ஒருவரை ஒருவர் விட்டுப்பிரிந்தபின், நீ என் மகள்களைத் துன்பப்படுத்தி, அவர்களையல்லாமல் வேறு பெண்களைத் திருமணம்செய்தால், யெகோவா எனக்கும் உனக்கும் நடுவில் நின்று கண்காணிப்பாராக; 50நம்முடனே ஒருவரும் இல்லை; பார், தேவனே எனக்கும் உனக்கும் சாட்சி” என்று சொன்னதால், அது மிஸ்பா என்னும் பெயர்பெற்றது. 51மேலும் லாபான் யாக்கோபை நோக்கி: “இதோ, இந்தக் குவியலையும் எனக்கும் உனக்கும் நடுவில் நான் நிறுத்தின தூணையும் பார். 52தீங்குசெய்ய நான் இந்தக் குவியலைக் கடந்து உன்னிடத்திற்கு வராமலிருக்கவும், நீ இந்தக் குவியலையும் இந்தத் தூணையும் கடந்து என்னிடத்திற்கு வராமலிருக்கவும் இந்தக் குவியலும் சாட்சி, இந்தத் தூணும் சாட்சி. 53ஆபிரகாமின் தேவனும் நாகோரின் தேவனும் அவர்கள் பிதாக்களின் தேவனுமாயிருக்கிறவர் நமக்கு நடுவில் நின்று நியாயந்தீர்ப்பாராக” என்றான். அப்பொழுது யாக்கோபு தன் தகப்பனாகிய ஈசாக்கின் பயபக்திக்குரியவர்மேல் ஆணையிட்டான். 54பின்பு, யாக்கோபு மலையின்மேல் பலியிட்டு, ஆகாரம் சாப்பிடத் தன் சகோதரர்களை அழைத்தான்; அப்படியே அவர்கள் சாப்பிட்டு மலையிலே இரவில் தங்கினார்கள். 55லாபான் அதிகாலையில் எழுந்திருந்து, தன் மகன்களையும் தன் மகள்களையும் முத்தம் செய்து, அவர்களை ஆசீர்வதித்தான். பின்பு லாபான் புறப்பட்டு, தன் இடத்திற்குத் திரும்பிப்போனான்.
Introduction
Genesis 31
Jacob was a very honest good man, a man of great devotion and integrity, yet he had more trouble and vexation than any of the patriarchs. He left his father's house in a fright, went to his uncle's in distress, very hard usage he met with there, and now is going back surrounded with fears. Here is, I. His resolution to return (v. 1-16). II. His clandestine departure, (Gen 31:17-21). III. Laban's pursuit of him in displeasure (Gen 31:22-25). IV. The hot words that passed between them (v. 26-42). V. Their amicable agreement at last (Gen 31:43, etc.).
Cross-references: Gen 31:17 · Gen 31:22 · Gen 31:43