2 Kings 23
IRV
யோசியா உடன்படிக்கையைப் புதுப்பித்தல்
1அப்பொழுது ராஜா யூதாவிலும் எருசலேமிலும் இருந்த மூப்பர்களையெல்லாம் வரவழைத்தான்; அவர்கள் அவனிடத்தில் கூடினபோது, 2ராஜாவும், அவனோடு யூதாவின் மனிதர்கள் யாவரும் எருசலேமின் குடிமக்கள் அனைவரும், ஆசாரியர்களும், தீர்க்கதரிசிகளும், சிறியோர்முதல் பெரியோர்வரையுள்ள அனைவரும் யெகோவாவின் ஆலயத்திற்குப் போனார்கள்; யெகோவாவுடைய ஆலயத்திலே கண்டெடுக்கப்பட்ட உடன்படிக்கை புத்தகத்தின் வார்த்தைகளையெல்லாம் அவர்கள் காதுகள் கேட்க வாசித்தான். 3அப்பொழுது ராஜா, தூண் அருகே நின்று, யெகோவாவைப் பின்பற்றி நடக்கவும், அவருடைய கற்பனைகளையும் அவருடைய சாட்சிகளையும் அவருடைய கட்டளைகளையும் முழு இருதயத்தோடும் முழு ஆத்துமாவோடும் கைக்கொள்ளவும், அந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற அந்த உடன்படிக்கையின் வார்த்தைகளை நிறைவேற்றவும் யெகோவாவுடைய சந்நிதியில் உடன்படிக்கை செய்தான்; மக்கள் எல்லோரும் உடன்படிக்கைக்கு உடன்பட்டார்கள். 4பின்பு ராஜா: பாகாலுக்கும் விக்கிரகத்தோப்புக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் செய்யப்பட்டிருந்த சகல பணிமுட்டுகளையும் யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து வெளியேற்ற, பிரதான ஆசாரியனாகிய இல்க்கியாவுக்கும் இரண்டாம் பகுதியிலுள்ள ஆசாரியர்களுக்கும் வாசல் காக்கிறவர்களுக்கும் கட்டளையிட்டு, அவைகளை எருசலேமுக்கு வெளியே கீதரோன் வெளிகளில் சுட்டெரித்து, அவைகளின் சாம்பலைப் பெத்தேலுக்குக் கொண்டுபோகச்செய்தான். 5யூதாவின் பட்டணங்களிலும் எருசலேமைச் சுற்றிலும் மேடைகளின்மேல் தூபம்காட்ட, யூதாவின் ராஜாக்கள் வைத்த பூசாரிகளையும், பாகாலுக்கும் சூரியனுக்கும் சந்திரனுக்கும் கிரகங்களுக்கும் வானத்தின் சகல சேனைகளுக்கும் தூபம்காட்டினவர்களையும் அகற்றிவிட்டான். 6தோப்பு விக்கிரகத்தை யெகோவாவின் ஆலயத்திலிருந்து எருசலேமுக்கு வெளியே கீதரோன் ஆற்றிற்குக் கொண்டுபோய், அதைக் கீதரோன் ஆற்றின் ஓரத்திலே சுட்டெரித்து, அதைத் தூளாக்கி, அந்தத் தூளைப் பொதுமக்களுடைய பிரேதக் குழிகளின்மேல் போடச்செய்தான். 7யெகோவாவின் ஆலயத்திற்கு அருகே பெண்கள் தோப்பு விக்கிரகத்திற்குக் கூடாரங்களை நெய்த இடத்திலுள்ள அவமானமான ஆண் விபசாரக்காரர்களின் வீடுகளை இடித்துப்போட்டான். 8அவன் யூதாவின் பட்டணங்களிலுள்ள எல்லா ஆசாரியர்களையும் வரச்சொல்லி, கேபாமுதல் பெயெர்செபாவரை ஆசாரியர்கள் தூபம்காட்டியிருந்த மேடைகளைத் தீட்டாக்கி, பட்டணத்தின் நுழைவாயில்களின் மேடைகளையும், பட்டணத்து வாசலுக்குப்போகும் வழிக்கு இடதுபுறமாயிருக்கிற பட்டணத்தலைவனாகிய யோசுவாவின் வாசற்படியில் இருந்த மேடையையும் இடித்துப்போட்டான். 9மேடைகளின் ஆசாரியர்கள் எருசலேமிலிருக்கிற யெகோவாவுடைய பலிபீடத்தின்மேல் பலியிடாமல், தங்கள் சகோதரர்களுக்குள்ளே புளிப்பில்லாத அப்பங்களை சாப்பிடுவதற்குமாத்திரம் அனுமதிபெற்றார்கள். 10ஒருவனும் மோளேகுக்கென்று தன் மகனையாகிலும் தன் மகளையாகிலும் நெருப்பிலே பலியிடாமலிருக்க, பென் இன்னோம் பள்ளத்தாக்கிலிருக்கிற தோப்பேத் என்னும் இடத்தையும் அவன் தீட்டாக்கி, 11யெகோவாவின் ஆலயத்திற்குள் போகிற இடம்துவங்கி, பட்டணத்திற்கு வெளியே இருக்கிற நாத்தான்மெலெக் என்னும் பிரதானியின் அறைவீடுவரை யூதாவின் ராஜாக்கள் சூரியனுக்கென்று வைத்திருந்த குதிரைகளை அகற்றி, சூரியனின் இரதங்களை அக்கினியில் சுட்டெரித்தான். 12யூதாவின் ராஜாக்கள் உண்டாக்கினதும், ஆகாசுடைய மேல்வீட்டில் இருந்ததுமான பலிபீடங்களையும், மனாசே யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் உண்டாக்கின பலிபீடங்களையும் ராஜா இடித்து, அவைகளின் தூளை அங்கேயிருந்து எடுத்துக் கீதரோன் ஆற்றில் கொட்டினான். 13எருசலேமுக்கு எதிரே இருக்கிற நாசமலையின் வலதுபுறத்தில் இஸ்ரவேலின் ராஜாவாகிய சாலொமோன் சீதோனியர்களின் அருவருப்பாகிய பெண் விக்கிரக தெய்வமாகிய அஸ்தரோத்திற்கும், மோவாபியர்களின் அருவருப்பாகிய காமோசுக்கும், அம்மோனியர்களின் அருவருப்பாகிய மில்கோமுக்கும் கட்டியிருந்த மேடைகளையும் ராஜா தீட்டாக்கி, 14சிலைகளை உடைத்து, விக்கிரகத்தோப்புகளை நிர்மூலமாக்கி, அவைகளின் இடத்தை மனிதர்களின் எலும்புகளால் நிரப்பினான். 15இஸ்ரவேலைப் பாவம்செய்யவைத்த நேபாத்தின் மகனாகிய யெரொபெயாம் பெத்தேலில் உண்டாக்கியிருந்த பலிபீடமும் மேடையும் ஆகிய அவ்விரண்டையும் அவன் இடித்து, அந்த மேடையைச் சுட்டெரித்துத் தூளாக்கி, விக்கிரகத்தோப்பையும் சுட்டெரித்தான். 16யோசியா திரும்பிப்பார்க்கிறபோது அங்கே அந்த மலையிலிருக்கிற கல்லறைகளைக் கண்டு, ஆட்களை அனுப்பி, அந்தக் கல்லறைகளிலுள்ள எலும்புகளை எடுத்துவரச்செய்து, இப்படி நடக்கும் என்று தேவனுடைய மனிதன் கூறின யெகோவாவுடைய வார்த்தையின்படியே, அவைகளை அந்தப் பலிபீடத்தின்மேல் சுட்டெரித்து அதைத் தீட்டாக்கினான். 17அப்பொழுது அவன்: நான் காண்கிற அந்தக் குறிப்படையாளம் என்ன என்று கேட்டதற்கு, அந்தப் பட்டணத்து மனிதர்கள்: அது யூதாவிலிருந்து வந்து, நீர் செய்த இந்தக் கிரியைகளைப் பெத்தேலின் பலிபீடத்திற்கு விரோதமாகக் கூறி அறிவித்த தேவனுடைய மனிதனின் கல்லறை என்றார்கள். 18அதற்கு அவன்: இருக்கட்டும், ஒருவனும் அவன் எலும்புகளைத் தொடவேண்டாம் என்றான்; அப்படியே அவனுடைய எலும்புகளைச் சமாரியாவிலிருந்து வந்த தீர்க்கதரிசியின் எலும்புகளோடு விட்டுவிட்டார்கள். 19யெகோவாவுக்குக் கோபமுண்டாக்க இஸ்ரவேலின் ராஜாக்கள் சமாரியாவின் பட்டணங்களில் உண்டாக்கியிருந்த மேடைகளின் கோவில்களையெல்லாம் யோசியா தகர்த்து, பெத்தேலிலே தான் செய்த செய்கைகளின்படியே அவைகளுக்குச் செய்து, 20அவ்விடங்களில் இருக்கிற மேடைகளின் ஆசாரியர்களையெல்லாம் பலிபீடங்களின்மேல் கொன்றுபோட்டு, அவைகளின்மேல் மனிதர்களின் எலும்புகளைச் சுட்டெரித்து, எருசலேமுக்குத் திரும்பினான். 21பின்பு ராஜா: இந்த உடன்படிக்கையின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறபடியே உங்கள் தேவனாகிய யெகோவாவுக்குப் பஸ்கா பண்டிகையை ஆசரியுங்கள் என்று சகல மக்களுக்கும் கட்டளையிட்டான். 22இஸ்ரவேலை நியாயம் விசாரித்த நியாயாதிபதிகளின் நாட்கள் துவங்கி, இஸ்ரவேலின் ராஜாக்கள் யூதாவின் ராஜாக்கள் ஆகிய அவர்களுடைய சகல நாட்களிலும் இந்தப் பஸ்காவைப்போல் பஸ்கா அனுசரிக்கப்படவில்லை. 23ராஜாவாகிய யோசியாவின் பதினெட்டாம் வருட ஆட்சியிலே யெகோவாவுக்கு இந்தப் பஸ்கா எருசலேமிலே அனுசரிக்கப்பட்டது. 24ஆசாரியனாகிய இல்க்கியா யெகோவாவுடைய ஆலயத்தில் கண்டெடுத்த புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற நியாயப்பிரமாணத்தின் வார்த்தைகளை நிறைவேற்றும்படிக்கு, யோசியா ஜோதிடர்களையும், குறிசொல்லுகிறவர்களையும், சிலைகளையும் அருவருப்பான சிலைகளையும், யூதாதேசத்திலும் எருசலேமிலும் காணப்பட்ட எல்லா அருவருப்புகளையும் நிர்மூலமாக்கினான். 25யெகோவாவிடத்திற்குத் தன் முழு இருதயத்தோடும் தன் முழு ஆத்துமாவோடும் தன் முழு பலத்தோடும் மோசேயின் நியாயப்பிரமாணத்திற்கு ஏற்றபடியெல்லாம் செய்ய மனதைச் சாய்த்தான்; அவனைப் போன்ற ராஜா அவனுக்குமுன் இருந்ததுமில்லை, அவனுக்குப்பின் எழும்பினதுமில்லை. 26ஆகிலும், மனாசே யெகோவாவுக்குக் கோபமுண்டாக்கின சகல காரியங்களினிமித்தமும் அவர் யூதாவின்மேல் கொண்ட தம்முடைய மகா கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பாமல்: 27நான் இஸ்ரவேலைத் தள்ளிவிட்டதுபோல யூதாவையும் என் முகத்தைவிட்டுத் தள்ளி, நான் தெரிந்துகொண்ட இந்த எருசலேம் நகரத்தையும், என் நாமம் விளங்கும் என்று நான் சொன்ன ஆலயத்தையும் வெறுத்துவிடுவேன் என்று யெகோவா சொன்னார். 28யோசியாவின் மற்ற செயல்பாடுகளும், அவன் செய்த யாவும், யூதாவுடைய ராஜாக்களின் நாளாகமப் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 29அவனுடைய நாட்களில் எகிப்தின் ராஜாவாகிய பார்வோன்நேகோ அசீரியா ராஜாவிற்கு விரோதமாக ஐப்பிராத்து நதிக்குப் போகிறபோது ராஜாவாகிய யோசியா அவனுக்கு எதிராகப் புறப்பட்டான்; பார்வோன்நேகோ அவனை மெகிதோவிலே கண்டபோது, அவனைக் கொன்றுபோட்டான். 30மரணமடைந்த அவனை அவனுடைய வேலைக்காரர்கள் ரதத்தின்மேல் ஏற்றி, மெகிதோவிலிருந்து எருசலேமுக்குக் கொண்டுவந்து, அவனை அவன் கல்லறையில் அடக்கம்செய்தார்கள்; அப்பொழுது தேசத்தின் மக்கள் யோசியாவின் மகனாகிய யோவாகாசை அழைத்து, அவனை அபிஷேகம்செய்து, அவன் தகப்பனுடைய இடத்தில் அவனை ராஜாவாக்கினார்கள்.
யூதாவின் ராஜாவாகிய யோவாகாஸ்
31யோவாகாஸ் ராஜாவாகிறபோது இருபத்துமூன்று வயதாயிருந்து, மூன்று மாதம் எருசலேமில் ஆட்சிசெய்தான்; லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகளான அவனுடைய தாயின் பெயர் அமுத்தாள். 32அவன் தன் முன்னோர்கள் செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 33அவன் எருசலேமில் அரசாளாதபடிக்கு, பார்வோன்நேகோ அவனை ஆமாத் தேசமான ரிப்லாவிலே பிடித்துக் கட்டுவித்து, தேசத்தின்மேல் நூறு தாலந்து வெள்ளியையும் ஒரு தாலந்து பொன்னையும் அபராதமாகச் சுமத்தி, 34யோசியாவின் மகனாகிய எலியாக்கீமை அவன் தகப்பனாகிய யோசியாவின் இடத்தில் ராஜாவாக வைத்து, அவன் பெயரை யோயாக்கீம் என்று மாற்றி, யோவாகாசைக் கொண்டுபோய் விட்டான்; இவன் எகிப்திற்குப் போய் அங்கே மரணமடைந்தான். 35அந்த வெள்ளியையும் பொன்னையும் யோயாக்கீம் பார்வோனுக்குக் கொடுத்தான்; ஆனாலும் பார்வோனுடைய கட்டளையின்படி அந்தப் பணத்தைக் கொடுக்கும்படி அவன் தேசத்தை மதிப்பிட்டு, அவரவர் மதிப்பின்படி அந்த வெள்ளியையும் பொன்னையும் பார்வோன்நேகோவுக்குக் கொடுக்கத்தக்கதாக தேசத்து மக்களின் கையிலே சுமத்தினான்.
யூதாவின் ராஜாவாகிய யோயாக்கீம்
36யோயாக்கீம் ராஜாவாகிறபோது இருபத்தைந்து வயதாயிருந்து, பதினொரு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான்; ரூமா ஊரைச்சேர்ந்த பெதாயாமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் செபுதாள். 37அவன் தன் முன்னோர்கள் செய்தபடியெல்லாம் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்.
Introduction
2 Kings 23
We have here, I. The happy continuance of the goodness of Josiah's reign, and the progress of the reformation he began, reading the law (Kg2 23:1, Kg2 23:2), renewing the covenant (Kg2 23:3), cleansing the temple (Kg2 23:4), and rooting out idols and idolatry, with all the relics thereof, in all places, as far as his power reached (v. 5-20), keeping a solemn passover (Kg2 23:21-23), and clearing the country of witches (Kg2 23:24); and in all this acting with extraordinary vigour (Kg2 23:25). II. The unhappy conclusion of it in his untimely death, as a token of the continuance of God's wrath against Jerusalem (Kg2 23:26-30). III. The more unhappy consequences of his death, in the bad reigns of his two sons Jehoahaz and Jehoiakim, that came after him (Kg2 23:31-37).
Cross-references: 2Kgs 23:1 · 2Kgs 23:2 · 2Kgs 23:3 · 2Kgs 23:4 · 2Kgs 23:21 · 2Kgs 23:24 · 2Kgs 23:25 · 2Kgs 23:26 · 2Kgs 23:31