2CH

2 Chronicles 33

IRV

யூதாவின் ராஜாவாகிய மனாசே

1மனாசே ராஜாவாகிறபோது பன்னிரண்டு வயதாயிருந்து, ஐம்பத்தைந்து வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். 2யெகோவா, இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்தின மக்களுடைய அருவருப்புகளின்படியே, அவன் யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான். 3அவன் தன் தகப்பனாகிய எசேக்கியா இடித்துப்போட்ட மேடைகளைத் திரும்பவும் கட்டி, பாகால்களுக்குப் பலிபீடங்களைக் கட்டி, விக்கிரகத்தோப்புகளை உண்டாக்கி, வானத்தின் நட்சத்திரங்களையெல்லாம் பணிந்துகொண்டு, அவைகளை வணங்கி, 4எருசலேமிலே என் நாமம் என்றென்றைக்கும் விளங்கும் என்று யெகோவா சொன்ன தம்முடைய ஆலயத்திலே பலிபீடங்களைக் கட்டி, 5யெகோவாவுடைய ஆலயத்தின் இரண்டு பிராகாரங்களிலும் வானத்தின் நட்சத்திரங்களுக்கெல்லாம் பலிபீடங்களைக் கட்டினான். 6அவன் பென் இன்னோம் பள்ளத்தாக்கிலே தன் மகன்களைத் தகனபலிகளாக தீயிலே பலியிட்டு, நாள் நட்சத்திரம் பார்த்து, பில்லிசூனியங்களை அநுசரித்து, ஜோதிடம் பார்க்கிறவர்களையும் குறிசொல்லுகிறவர்களையும் வைத்து, யெகோவாவுக்குக் கோபமுண்டாக அவர் பார்வைக்கு மிகுதியும் பொல்லாப்பானதைச் செய்தான். 7இந்த ஆலயத்திலும், இஸ்ரவேல் வம்சங்களிலெல்லாம் நான் தெரிந்துகொண்ட எருசலேமிலும், என் நாமத்தை என்றென்றைக்கும் விளங்கச்செய்வேன் என்றும், 8நான் மோசேயைக்கொண்டு இஸ்ரவேலுக்குக் கொடுத்த சகல நியாயப்பிரமாணத்திற்கும், கட்டளைகளுக்கும், நியாயங்களுக்கும் ஏற்றபடியே அவர்களுக்கு நான் கற்பித்தவைகளையெல்லாம் அவர்கள் செய்யக் கவனமாக இருந்தார்களேயானால், நான் இனி அவர்கள் கால்களை அவர்கள் முன்னோர்களுக்கு நிலைப்படுத்திவைத்த தேசத்திலிருந்து விலகச்செய்வதில்லையென்றும், தேவன் தாவீதோடும் அவன் மகனாகிய சாலொமோனோடும் சொல்லியிருந்த தேவனுடைய ஆலயத்தில்தானே, அவன் தான் செய்த விக்கிரகமாகிய சிலையை நாட்டினான். 9அப்படியே யெகோவா இஸ்ரவேல் வம்சத்தாருக்கு முன்பாக அழித்த மக்களைவிட, யூதாவும் எருசலேமின் மக்களும் பொல்லாப்புச் செய்யதக்கதாக, மனாசே அவர்களை வழிவிலகிப் போகச்செய்தான். 10யெகோவா மனாசேயோடும் அவனுடைய மக்களோடும் பேசினபோதிலும், அவர்கள் கவனிக்காதே போனார்கள். 11ஆகையால் யெகோவா: அசீரியா ராஜாவின் தளபதிகளை அவர்கள்மேல் வரச்செய்தார்; அவர்கள் மனாசேயை முட்செடிகளில் பிடித்து, இரண்டு வெண்கலச்சங்கிலியால் அவனைக் கட்டி பாபிலோனுக்குக் கொண்டுபோனார்கள். 12இப்படி அவன் நெருக்கப்படும்போது, தன் தேவனாகிய யெகோவாவை நோக்கிக் கெஞ்சி, தன் முன்னோர்களின் தேவனுக்கு முன்பாக தன்னை மிகவும் தாழ்த்தினான். 13அவரை நோக்கி, அவன் விண்ணப்பம் செய்துகொண்டிருக்கிறபோது, அவர் அவன் கெஞ்சுதலுக்கு இரங்கி, அவனுடைய ஜெபத்தைக் கேட்டு, அவனைத் திரும்ப எருசலேமிலுள்ள தன்னுடைய தேசத்திற்கு வரச்செய்தார்; யெகோவாவே தேவன் என்று அப்பொழுது மனாசே அறிந்தான்.

14பின்பு அவன் தாவீதுடைய நகரத்தின் வெளி மதிலைக் கீயோனுக்கு மேற்கேயிருக்கிற பள்ளத்தாக்கு துவங்கி மீன்வாசல்வரை கட்டி, ஓபேலைச் சுற்றிலும் அதை வளைத்து, அதை மிகவும் உயர்த்தி, யூதாவிலுள்ள பாதுகாப்பான பட்டணங்களிலெல்லாம் படைத்தலைவரை ஏற்படுத்தி, 15யெகோவாவுடைய ஆலயத்திலிருந்து அந்நிய தெய்வங்களையும் அந்த சிலையையும் அகற்றிவிட்டு, யெகோவாவுடைய ஆலயமுள்ள மலையிலும் எருசலேமிலும் தான் கட்டியிருந்த எல்லாப் பலிபீடங்களையும் அகற்றி, பட்டணத்திற்கு வெளியே போடச் செய்து, 16யெகோவாவுடைய பலிபீடத்தைப் பழுதுபார்த்து, அதன்மேல் சமாதானபலிகளையும் ஸ்தோத்திரபலிகளையும் செலுத்தி, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவை ஆராதிக்கவேண்டும் என்று யூதாவுக்குக் கட்டளையிட்டான். 17ஆனாலும் மக்கள் இன்னும் மேடைகளில் பலியிட்டுவந்தார்கள்; இருந்தாலும் தங்கள் தேவனாகிய கர்த்தருக்கென்றே அப்படிச் செய்தார்கள். 18மனாசேயின் மற்ற காரியங்களும், அவன் தன் தேவனை நோக்கிச் செய்த விண்ணப்பமும், இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்தில் அவனோடு பேசின தரிசனம் காண்கிறவர்களின் வார்த்தைகளும், இஸ்ரவேல் ராஜாக்களின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 19அவனுடைய விண்ணப்பமும், அவன் கெஞ்சுதலுக்குக் யெகோவா இரங்கினதும், அவன் தன்னைத் தாழ்த்தினதற்கு முன்னே செய்த அவனுடைய எல்லாப் பாவமும் துரோகமும், அவன் மேடைகளைக் கட்டி விக்கிரகத் தோப்புகளையும் சிலைகளையும் நாட்டின இடங்களும், ஓசாயின் புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது. 20மனாசே இறந்தபின்பு, அவனை அவன் வீட்டிலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய ஆமோன் அவனுடைய இடத்தில் ராஜாவானான்.

யூதாவின் ராஜாவாகிய ஆமோன்

21ஆமோன் ராஜாவாகிறபோது இருபத்திரண்டு வயதாயிருந்து, இரண்டு வருடங்கள் எருசலேமில் ஆட்சிசெய்தான். 22அவன் தன் தகப்பனாகிய மனாசே செய்ததுபோல யெகோவாவின் பார்வைக்குப் பொல்லாப்பானதைச் செய்தான்; தன் தகப்பனாகிய மனாசே செய்துவைத்த சிலைகளுக்கெல்லாம் ஆமோன் பலியிட்டு, அவைகளை வணங்கினான். 23தன் தகப்பனாகிய மனாசே தன்னைத் தாழ்த்திக்கொண்டதுபோல, இந்த ஆமோன் என்பவன் யெகோவாவுக்கு முன்பாகத் தன்னைத் தாழ்த்தாமல் மேன்மேலும் அக்கிரமம் செய்துவந்தான். 24அவனுடைய வேலைக்காரர்கள் அவனுக்கு விரோதமாக சதிசெய்து, அவன் அரண்மனையிலே அவனைக் கொன்று போட்டார்கள். 25அப்பொழுது தேசத்து மக்கள் ஆமோன் என்னும் ராஜாவுக்கு விரோதமாக சதிசெய்த அனைவரையும் வெட்டிப்போட்டு, அவன் மகனாகிய யோசியாவை அவனுடைய இடத்தில் ராஜாவாக்கினார்கள்.

Matthew Henry's chapter overview

Introduction

2 Chronicles 33

In this chapter we have the history of the reign, I. Of Manasseh, who reigned long. 1. His wretched apostasy from God, and revolt to idolatry and all wickedness (Ch2 33:1-10). 2. His happy return to God in his affliction; his repentance (Ch2 33:11-13), his reformation (Ch2 33:15-17), and prosperity (Ch2 33:14), with the conclusion of his reign (Ch2 33:18-20). II. Of Amon, who reigned very wickedly (Ch2 33:21-23), and soon ended his days unhappily (Ch2 33:24, Ch2 33:25).

Cross-references: 2Chr 33:1 · 2Chr 33:11 · 2Chr 33:15 · 2Chr 33:14 · 2Chr 33:18 · 2Chr 33:21 · 2Chr 33:24 · 2Chr 33:25