PSA

Psalm 73

IRV

ஆசாபின் பாடல்.

1சுத்த இருதயமுள்ளவர்களாகிய இஸ்ரவேலர்களுக்கு

தேவன் நல்லவராகவே இருக்கிறார்.

2ஆனாலும் என்னுடைய கால்கள் தள்ளாடுதலுக்கும்,

என்னுடைய அடிகள் சறுக்குதலுக்கும் சற்றே தப்பியது.

3துன்மார்க்கர்களின் வாழ்வை நான் காணும்போது,

வீம்புக்காரர்களாகிய அவர்கள்மேல் பொறாமை கொண்டேன்.

4மரணம்வரை அவர்களுக்கு வேதனை இல்லை;

அவர்களுடைய பெலன் உறுதியாக இருக்கிறது.

5மனிதர்கள்படும் வருத்தத்தில் அகப்படமாட்டார்கள்;

மனிதர்கள் அடையும் உபத்திரவத்தை அடையமாட்டார்கள்.

6ஆகையால் பெருமை கழுத்து அணிகலன்போல அவர்களைச் சுற்றிக்கொள்ளும்,

கொடுமை ஆடையைப்போல் அவர்களை மூடிக்கொள்ளும்.

7அவர்களுடைய கண்கள் கொழுப்பினால் எடுப்பாகப் பார்க்கிறது;

அவர்கள் இருதயம் விரும்புவதிலும் அதிகமாக நடக்கிறது.

8அவர்கள் சீர்கெட்டுப்போய், அகந்தையாகக் கொடுமை பேசுகிறார்கள்;

பெருமையாகப் பேசுகிறார்கள்.

9தங்களுடைய வாய் வானம்வரை எட்டப் பேசுகிறார்கள்;

அவர்களுடைய நாவு பூமியெங்கும் உலாவுகிறது.

10ஆகையால் அவருடைய மக்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்;

தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாகச் சுரந்துவரும்.

11தேவனுக்கு அது எப்படித் தெரியும்?

உன்னதமானவருக்கு அதைப்பற்றி அறிவு உண்டோ?

என்று சொல்லுகிறார்கள்.

12இதோ, இவர்கள் துன்மார்க்கர்கள்;

இவர்கள் என்றும் சுகமாக வாழ்கிறவர்களாயிருந்து,

சொத்தைப் பெருகச்செய்கிறார்கள்.

13நான் வீணாகவே என்னுடைய இருதயத்தைச் சுத்தம்செய்து,

குற்றமில்லாமையிலே என்னுடைய கைகளைக் கழுவினேன்.

14நாள்தோறும் நான் வாதிக்கப்பட்டும்,

காலைதோறும் தண்டிக்கப்பட்டும் இருக்கிறேன்.

15இந்த விதமாகப் பேசுவேன் என்று நான் சொன்னால்,

இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.

16இதை அறியும்படிக்கு யோசித்துப்பார்த்தேன்;

நான் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்திற்குள் நுழைந்து,

17அவர்கள் முடிவைக் கவனித்து உணரும்வரை,

அது என்னுடைய பார்வைக்கு கடினமாக இருந்தது.

18நிச்சயமாகவே நீர் அவர்களைச் சறுக்கலான இடங்களில் நிறுத்தி,

பாழான இடங்களில் விழச்செய்கிறீர்.

19அவர்கள் ஒரு நிமிடத்தில் எவ்வளவு பாழாகிப்போகிறார்கள்!

பயங்கரங்களால் அழிந்து ஒன்றுமில்லாமல் போகிறார்கள்.

20தூக்கம் தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே,

நீர் விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை கலைத்துவிடுவீர்.

21இப்படியாக என்னுடைய மனம் கசந்தது,

என்னுடைய உள்மனதிலே குத்தப்பட்டேன்.

22நான் காரியம் அறியாத மூடனானேன்;

உமக்கு முன்பாக மிருகம் போலிருந்தேன்.

23ஆனாலும் நான் எப்பொழுதும் உம்மோடிருக்கிறேன்;

என்னுடைய வலதுகையைப் பிடித்துத் தாங்குகிறீர்.

24உம்முடைய ஆலோசனையின்படி நீர் என்னை நடத்தி,

முடிவிலே என்னை மகிமையில் ஏற்றுக்கொள்வீர்.

25பரலோகத்தில் உம்மையல்லாமல் எனக்கு யார் உண்டு?

பூலோகத்தில் உம்மைத் தவிர எனக்கு வேறே விருப்பமில்லை.

26என்னுடைய சரீரமும் என்னுடைய இருதயமும் வளர்ச்சியில்லாமல் போகிறது;

தேவன் என்றென்றைக்கும் என்னுடைய இருதயத்தின் கன்மலையும்

என்னுடைய பங்குமாக இருக்கிறார்.

27இதோ, உம்மைவிட்டுத் தூரமாகப்போகிறவர்கள் நாசமடைவார்கள்;

உம்மைவிட்டு உண்மையில்லாமல் போகிற அனைவரையும் அழிப்பீர்.

28எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்;

நான் உமது செயல்களையெல்லாம் சொல்லிவரும்படி

கர்த்தராகிய ஆண்டவர்மேல் என்னுடைய நம்பிக்கையை வைத்திருக்கிறேன்.