1 Kings 8
IRV
உடன்படிக்கைப் பெட்டி ஆலயத்திற்குக் கொண்டுவரப்படுதல்
1அப்பொழுது யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியைச் சீயோன் என்னும் தாவீதின் நகரத்திலிருந்து கொண்டுவரும்படி சாலொமோன் இஸ்ரவேலின் மூப்பர்களையும், கோத்திரத் தலைமையில் உள்ளவர்களாகிய இஸ்ரவேல் மக்களிலுள்ள பிதாக்களின் தலைவர்கள் அனைவரையும், எருசலேமில் ராஜாவாகிய சாலொமோன் தன்னிடம் கூடிவரச்செய்தான். 2இஸ்ரவேல் மனிதர்கள் எல்லோரும் 7 ஆம் மாதமாகிய ஏத்தானீம் மாதத்தின் பண்டிகையிலே, ராஜாவாகிய சாலொமோனிடம் கூடிவந்தார்கள். 3இஸ்ரவேலின் மூப்பர்கள் அனைவரும் வந்திருக்கும்போது, ஆசாரியர்கள் யெகோவாவுடைய பெட்டியை எடுத்து, 4பெட்டியையும், ஆசரிப்புக் கூடாரத்தையும், கூடாரத்திலிருந்த பரிசுத்த பணிப்பொருட்கள் அனைத்தையும் சுமந்து கொண்டுவந்தார்கள்; ஆசாரியர்களும், லேவியர்களும், அவைகளைச் சுமந்தார்கள். 5ராஜாவாகிய சாலொமோனும் அவனோடு கூடிய இஸ்ரவேல் சபை மக்கள் அனைவரும் பெட்டிக்கு முன்பாக நடந்து, எண்ணிக்கையும் கணக்கும் இல்லாத திரளான ஆடுகளையும், மாடுகளையும் பலியிட்டார்கள். 6அப்படியே ஆசாரியர்கள் யெகோவாவுடைய உடன்படிக்கைப் பெட்டியை ஆலயத்தின் உள் அறையாகிய மகா பரிசுத்த ஸ்தலத்திலே கேருபீன்களுடைய இறக்கைகளின்கீழே கொண்டுவந்து வைத்தார்கள். 7கேருபீன்கள் பெட்டி இருக்கும் இடத்திலே தங்கள் இரண்டு இறக்கைகளையும் விரித்து, உயர இருந்து பெட்டியையும் அதின் தண்டுகளையும் மூடிக்கொண்டிருந்தது. 8தண்டுகளின் முனைகள் உள் அறைக்கு முன்னான பரிசுத்த இடத்திலே காணப்படும்படியாக அந்தத் தண்டுகளை முன்னுக்கு இழுத்தார்கள்; ஆகிலும் வெளியே அவைகள் காணப்படவில்லை; அவைகள் இந்த நாள் வரைக்கும் அங்கேதான் இருக்கிறது. 9இஸ்ரவேல் மக்கள் எகிப்து தேசத்திலிருந்து புறப்பட்டபின்பு யெகோவா அவர்களோடு உடன்படிக்கை செய்கிறபோது, மோசே ஓரேபிலே அந்தப் பெட்டியில் வைத்த இரண்டு கற்பலகைகளைத் தவிர அதிலே வேறொன்றும் இருந்ததில்லை. 10அப்பொழுது ஆசாரியர்கள் பரிசுத்த ஸ்தலத்திலிருந்து புறப்படும்போது, மேகமானது யெகோவாவுடைய ஆலயத்தை நிரப்பியது. 11மேகத்தினால் ஆசாரியர்கள் ஊழியம் செய்வதற்கு நிற்கமுடியாமற்போனது; யெகோவாவுடைய மகிமை யெகோவாவுடைய ஆலயத்தை நிரப்பியது.
12அப்பொழுது சாலொமோன்: காரிருளிலே வாழ்வேன் என்று யெகோவா சொன்னார் என்றும், 13தேவரீர் தங்கக்கூடிய வீடும், நீர் என்றைக்கும் தங்ககூடிய நிலையான இடமுமாகிய ஆலயத்தை உமக்குக் கட்டினேன் என்றும் சொல்லி, 14ராஜா திரும்பி, இஸ்ரவேல் சபையையெல்லாம் ஆசீர்வதித்தான்; இஸ்ரவேல் சபையார்கள் எல்லோரும் நின்றார்கள். 15அவன் சொன்னது: இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவுக்கு ஸ்தோத்திரம்; அவர் என்னுடைய தகப்பனாகிய தாவீதுக்குத் தம்முடைய வாக்கினால் சொன்னதைத் தம்முடைய கரத்தினால் நிறைவேற்றினார். 16அவர் நான் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலை எகிப்திலிருந்து புறப்படச்செய்த நாள்முதல், என்னுடைய நாமம் வெளிப்படும்படி, ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்று நான் இஸ்ரவேலுடைய எல்லாக் கோத்திரங்களிலும் உள்ள ஒரு பட்டணத்தையும் தெரிந்துகொள்ளாமல் என்னுடைய மக்களாகிய இஸ்ரவேலின்மேல் அதிகாரியாக இருக்கும்படி தாவீதையே தெரிந்துகொண்டேன் என்றார். 17இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் என்னுடைய தகப்பனாகிய தாவீதின் இருதயத்தில் இருந்தது. 18ஆனாலும் யெகோவா என்னுடைய தகப்பனாகிய தாவீதை நோக்கி: என்னுடைய நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்கிற விருப்பம் உன்னுடைய மனதிலே இருந்தது நல்ல காரியந்தான். 19ஆனாலும் நீ அந்த ஆலயத்தைக் கட்டமாட்டாய், உனக்கு பிறக்கும் உன்னுடைய மகனே என்னுடைய நாமத்திற்கு அந்த ஆலயத்தைக் கட்டுவான் என்றார். 20இப்போதும் யெகோவா சொல்லிய தம்முடைய வார்த்தையை நிறைவேற்றினார்; யெகோவா சொன்னபடியே, நான் என்னுடைய தகப்பனாகிய தாவீதின் இடத்தில் எழுந்து, இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் உட்கார்ந்து, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவின் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்டினேன். 21யெகோவா நம்முடைய பிதாக்களை எகிப்து தேசத்திலிருந்து புறப்படச்செய்தபோது, அவர்களோடு செய்த உடன்படிக்கை இருக்கிற பெட்டிக்காக அதிலே ஒரு இடத்தை உண்டாக்கினேன் என்றான்.
சாலொமோனின் பிரதிஷ்டை ஜெபம்
22பின்பு சாலொமோன்: யெகோவாவுடைய பலிபீடத்திற்குமுன்னே இஸ்ரவேல் சபையார்கள் எல்லோருக்கும் எதிராக நின்று, வானத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்து: 23இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, மேலே வானத்திலும் கீழே பூமியிலும் உமக்கு நிகரான தேவன் இல்லை; தங்களுடைய முழு இருதயத்தோடும் உமக்கு முன்பாக நடக்கிற உமது அடியார்களுக்கு உடன்படிக்கையையும் கிருபையையும் காத்து வருகிறீர். 24தேவரீர் என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியனுக்குச் செய்த வாக்குத்தத்தத்தைக் காத்தருளினீர்; அதை உம்முடைய வாக்கினால் சொன்னீர்; இந்த நாளில் இருக்கிறபடி, உம்முடைய கரத்தினால் அதை நிறைவேற்றினீர். 25இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவாவே, தேவரீர் என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியக்காரனை நோக்கி: நீ எனக்கு முன்பாக நடந்ததுபோல, உன்னுடைய மகன்களும் எனக்கு முன்பாக நடக்கும்படி தங்கள் வழியைக் காத்துக்கொண்டால், இஸ்ரவேலின் சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருக்கும் ஆண்மகன் எனக்கு முன்பாக உனக்கு இல்லாமல் போவதில்லை என்று சொன்னதை இப்பொழுது அவனுக்கு நிறைவேற்றும். 26இஸ்ரவேலின் தேவனே, என்னுடைய தகப்பனாகிய தாவீது என்னும் உம்முடைய ஊழியக்காரனுக்குச் சொன்ன உம்முடைய வார்த்தை மெய்யென்று வெளிப்படுவதாக. 27தேவன் மெய்யாக பூமியிலே தங்குவாரோ? இதோ, வானங்களும் வானாதி வானங்களும் உமக்குப் போதாதே; நான் கட்டின இந்த ஆலயம் எம்மாத்திரம்? 28என்னுடைய தேவனாகிய யெகோவாவே, உமது அடியேன் இன்று உமக்கு முன்பாக செய்கிற விண்ணப்பத்தையும் மன்றாட்டையும் கேட்டு, உமது அடியேனுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கவனத்தில் கொண்டருளும். 29உமது அடியேன் இந்த இடத்திலே செய்யும் விண்ணப்பத்தைக் கேட்கும்படி என்னுடைய நாமம் அங்கே இருக்கும் என்று நீர் சொன்ன இடமாகிய இந்த ஆலயத்தின் மேல் உம்முடைய கண்கள் இரவும் பகலும் திறந்திருப்பதாக. 30உமது அடியானும், இந்த இடத்திலே விண்ணப்பம் செய்யப்போகிற உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்யும் ஜெபத்தைக் கேட்டருளும்; பரலோகமாகிய நீர் தங்குமிடத்திலே அதை கேட்பீராக, கேட்டு மன்னிப்பீராக. 31ஒருவன் தன் அருகில் உள்ளவனுக்கு விரோதமாகக் குற்றம் செய்திருக்கும்போது, இவன் அவனை ஆணையிடச்சொல்லும்போது, அந்த ஆணை இந்த ஆலயத்திலே உம்முடைய பலிபீடத்திற்கு முன்பு வந்தால், 32அப்பொழுது பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, துன்மார்க்கனுடைய செய்கையை அவனுடைய தலையின்மேல் சுமரச்செய்து, அவனைக் குற்றவாளியாகத் தீர்க்கவும், நீதிமானுக்கு அவனுடைய நீதிக்குத் தகுந்தபடி செய்து அவனை நீதிமானாக்கவும் தக்கதாக உமது அடியார்களை நியாயந்தீர்ப்பீராக. 33உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் எதிரிகளுக்கு முன்பாக தோற்றுப்போய், உம்மிடத்திற்குத் திரும்பி, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, இந்த ஆலயத்திற்கு நேராக உம்மை நோக்கி விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் செய்தால், 34பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலின் பாவத்தை மன்னித்து, அவர்களுடைய முன்னோர்களுக்கு நீர் கொடுத்த தேசத்திற்கு அவர்களைத் திரும்பி வரச்செய்வீராக. 35அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம் செய்ததால் வானம் அடைபட்டு மழைபெய்யாமல் இருக்கும்போது, அவர்கள் இந்த இடத்திற்கு நேராக விண்ணப்பம் செய்து, உம்முடைய நாமத்தை அறிக்கைசெய்து, தங்களை தேவரீர் மனவருத்தப்படுத்தும்போது தங்களுடைய பாவங்களைவிட்டுத் திரும்பினால். 36பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு, உமது அடியார்களும் உமது மக்களாகிய இஸ்ரவேலும் செய்த பாவத்தை மன்னித்து, அவர்கள் நடக்கவேண்டிய நல்வழியை அவர்களுக்குப் போதித்து, தேவரீர் உமது மக்களுக்குச் சுதந்திரமாகக் கொடுத்த உமது தேசத்தில் மழை பெய்யக் கட்டளையிடுவீராக. 37தேசத்திலே பஞ்சம் உண்டாகிறபோதும், கொள்ளைநோய் உண்டாகிறபோதும், வறட்சி, விஷப்பனி, வெட்டுக்கிளி, பச்சைக்கிளி உண்டாகிறபோதும், அவர்களுடைய எதிரிகள் தேசத்திலுள்ள பட்டணங்களை முற்றுக்கையிடும்போதும், ஏதாவது ஒரு வாதையோ வியாதியோ வரும்போதும், 38உம்முடைய மக்களாகிய இஸ்ரவேல் அனைவரிலும் எந்த மனிதனானாலும் தன்னுடைய இருதயத்தின் வாதையை உணர்ந்து, இந்த ஆலயத்திற்கு நேராகத் தன்னுடைய கைகளை விரித்துச் செய்யும் எல்லா விண்ணப்பத்தையும், எல்லா வேண்டுதலையும், 39நீர் தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் கேட்டு மன்னித்து, 40தேவரீர் எங்கள் முன்னோர்களுக்குக் கொடுத்த தேசத்தில் அவர்கள் உயிரோடிருக்கும் நாளெல்லாம் உமக்குப் பயப்படும்படி தேவரீர் ஒருவரே எல்லா மனிதர்களின் இருதயத்தையும் அறிந்தவராக இருக்கிறபடியால், நீர் அவனவனுடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியே, அவனவனுடைய வழிகளுக்குத் தகுந்தபடி செய்து, அவனவனுக்குப் பலன் அளிப்பீராக. 41உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலர்கள் அல்லாத அந்நியர்கள் உமது மகத்துவமான நாமத்தையும், உமது பலத்த கரத்தையும், உமது ஓங்கிய புயத்தையும் கேள்விப்படுவார்களே. 42அப்படிப்பட்ட அந்நியனும், உமது நாமத்தினிமித்தம் தூர தேசத்திலிருந்து வந்து, இந்த ஆலயத்திற்கு நேராக விண்ணப்பம் செய்தால், 43உமது தங்குமிடமாகிய பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அதைக் கேட்டு, பூமியின் மக்களெல்லோரும் உம்முடைய மக்களாகிய இஸ்ரவேலைப்போல உமக்குப் பயப்படும்படியும், நான் கட்டின இந்த ஆலயத்திற்கு உம்முடைய நாமம் வைக்கப்பட்டதென்று அறியும்படியும், உம்முடைய நாமத்தை அறிந்துகொள்வதற்காக, அந்த அந்நியன் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் செய்வீராக. 44நீர் உம்முடைய மக்களை அனுப்பும் வழியிலே அவர்கள் தங்கள் எதிரிகளோடு யுத்தம் செய்யப் புறப்படும்போது, நீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக யெகோவாவை நோக்கி விண்ணப்பம் செய்தால், 45பரலோகத்தில் இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரிப்பீராக. 46பாவம் செய்யாத மனிதன் இல்லையே; ஆகையால், அவர்கள் உமக்கு விரோதமாகப் பாவம்செய்து, தேவரீர் அவர்கள்மேல் கோபம்கொண்டு, அவர்களுடைய எதிரிகளுடைய கையில் அவர்களை ஒப்புக்கொடுத்து, அந்த எதிரிகள் அவர்களைத் தூரத்திலோ அருகிலோ இருக்கிற தங்கள் தேசத்திற்குச் சிறைபிடித்துக் கொண்டுபோகும்போது, 47அவர்கள் சிறைப்பட்டுப் போயிருக்கிற தேசத்திலே தங்களில் உணர்வடைந்து, மனந்திரும்பி: நாங்கள் பாவம்செய்து, அக்கிரமம்செய்து, துன்மார்க்கமாக நடந்தோம் என்று தங்களுடைய சிறையிருப்பான தேசத்திலே உம்மை நோக்கி வேண்டுதல் செய்து, 48தங்களைச் சிறைபிடித்துக்கொண்ட தங்களுடைய எதிரிகளின் தேசத்திலே தங்களுடைய முழு இருதயத்தோடும் தங்களுடைய முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, தேவரீர் தங்களுடைய பிதாக்களுக்குக் கொடுத்த தங்களுடைய தேசத்திற்கும், தேவரீர் தெரிந்துகொண்ட இந்த நகரத்திற்கும், உம்முடைய நாமத்திற்கு நான் கட்டின இந்த ஆலயத்திற்கும் நேராக உம்மை நோக்கி விண்ணப்பம் செய்யும்போது, 49நீர் தங்குமிடமாகிய பரலோகத்திலே இருக்கிற தேவரீர் அவர்களுடைய விண்ணப்பத்தையும் வேண்டுதலையும் கேட்டு, அவர்களுடைய நியாயத்தை விசாரித்து, 50உம்முடைய மக்கள் உமக்கு விரோதமாகச் செய்த பாவத்தையும், அவர்கள் உம்முடைய கட்டளையை மீறிய அவர்களுடைய துரோகங்களை எல்லாம் மன்னித்து, அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோகிறவர்கள் அவர்களுக்கு இரங்கத்தக்கதான இரக்கத்தை அவர்களுக்குக் கிடைக்கச் செய்வீராக. 51அவர்கள் எகிப்து என்கிற இரும்புச் சூளையின் நடுவிலிருந்து தேவரீர் புறப்படச்செய்த உம்முடைய மக்களும் உம்முடைய சுதந்திரமுமாக இருக்கிறார்களே. 52அவர்கள் உம்மை நோக்கி வேண்டிக்கொள்வதின்படியெல்லாம் தேவரீர் அவர்களுக்குச் செய்யும்படி, உம்முடைய கண்கள் உமது அடியானின் வேண்டுதலுக்கும், உமது மக்களாகிய இஸ்ரவேலின் வேண்டுதலுக்கும் திறந்திருப்பதாக. 53கர்த்தராகிய ஆண்டவரே, நீர் எங்களுடைய பிதாக்களை எகிப்திலிருந்து புறப்படச்செய்யும்போது, உம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயைக்கொண்டு சொன்னபடியே, தேவரீர் பூமியின் எல்லா மக்களிலும் அவர்களை உமக்குச் சுதந்திரமாகப் பிரித்தெடுத்தீரே என்று விண்ணப்பம் செய்தான்.
54சாலொமோன் யெகோவாவை நோக்கி, இந்த ஜெபத்தையும் வேண்டுதலையும் எல்லாம் செய்து முடித்தபின்பு, அவன் யெகோவாவுடைய பலிபீடத்திற்கு முன்பாகத் தன்னுடைய கைகளை வானத்திற்கு நேராக விரித்து, முழங்காற்படியிட்டிருந்ததைவிட்டு எழுந்து, 55நின்று, இஸ்ரவேல் சபையார் எல்லோரையும் ஆசீர்வதித்து, உரத்த சத்தத்தோடு சொன்னது: 56தாம் வாக்குத்தத்தம் செய்தபடியெல்லாம் தம்முடைய மக்களாகிய இஸ்ரவேலுக்கு இளைப்பாறுதலைக் கொடுத்த யெகோவாவுக்கு ஸ்தோத்திரம், அவர் தம்முடைய ஊழியக்காரனாகிய மோசேயைக்கொண்டு சொன்ன அவருடைய நல்வார்த்தைகளில் ஒரு வார்த்தைகூட தவறிப்போகவில்லை. 57நம்முடைய தேவனாகிய யெகோவா நம்மைக் கைவிடாமலும், நம்மை நெகிழவிடாமலும், அவர் நம்முடைய முன்னோர்களோடு இருந்ததுபோல, நம்மோடும் இருந்து, 58நாம் அவருடைய வழிகளில் எல்லாம் நடப்பதற்கும், அவர் நம்முடைய பிதாக்களுக்குக் கட்டளையிட்ட அவருடைய கற்பனைகளையும், கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொள்ளுவதற்கும், நம்முடைய இருதயத்தை அவர்பக்கமாக திரும்பச்செய்வாராக. 59யெகோவாவே தேவன், வேறொருவரும் இல்லையென்பதை பூமியின் மக்களெல்லாம் அறியும்படியாக, 60அவர் தமது அடியானுடைய நியாயத்தையும், தமது மக்களாகிய இஸ்ரவேலின் நியாயத்தையும், அந்தந்த நாளில் நடக்கும் காரியத்திற்குத் தகுந்தபடி விசாரிப்பதற்கு, நான் யெகோவாவுக்கு முன்பாக விண்ணப்பம்செய்த என்னுடைய வார்த்தைகள் இரவும்பகலும் நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் இருப்பதாக. 61ஆதலால் இந்த நாளில் இருக்கிறதுபோல, நீங்கள் அவருடைய கட்டளைகளில் நடந்து, அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ள, உங்களுடைய இருதயம் நம்முடைய தேவனாகிய யெகோவாவோடு உத்தமமாக இருப்பதாக என்றான்.
ஆலய பிரதிஷ்டை
62பின்பு ராஜாவும் அவனோடு இருந்த இஸ்ரவேலர்கள் அனைவரும், யெகோவாவுடைய சந்நிதியில் பலிகளைச் செலுத்தினார்கள். 63சாலொமோன் யெகோவாவுக்குச் சமாதானபலிகளாக, 22,000 மாடுகளையும், ஒரு 1,20,000 ஆடுகளையும் பலியிட்டான்; இவ்விதமாக ராஜாவும் இஸ்ரவேல் மக்கள் அனைவரும் யெகோவாவுடைய ஆலயத்தைப் பிரதிஷ்டை செய்தார்கள். 64யெகோவாவுடைய சந்நிதியில் இருந்த வெண்கலப் பலிபீடமானது சர்வாங்க தகனபலிகளையும், போஜனபலிகளையும், சமாதானபலிகளின் கொழுப்பையும் கொள்ளமாட்டாமல் சிறிதாக இருந்ததால், ராஜா யெகோவாவுடைய ஆலயத்திற்குமுன்பு இருக்கிற முற்றத்தின் மையத்தைப் பரிசுத்தப்படுத்தி, அன்றையதினம் அங்கே சர்வாங்க தகனபலிகளையும், உணவுபலிகளையும், சமாதானபலிகளின் கொழுப்பையும் செலுத்தினான். 65அந்தக்காலத்திலேயே சாலொமோனும், ஆமாத் பட்டணத்தின் எல்லைதுவங்கி எகிப்தின் நதிவரை இருந்து, அவனோடு இருந்த பெரிய கூட்டமாகிய இஸ்ரவேல் மக்கள் அனைவரும் நம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் ஏழுநாட்களும், அதற்குப் பின்பு வேறே ஏழுநாட்களுமாக பதினான்கு நாட்கள்வரை பண்டிகையை கொண்டாடினார்கள். 66எட்டாம் நாளிலே மக்களுக்கு விடைகொடுத்து அனுப்பினான்; அவர்கள் ராஜாவை வாழ்த்தி, யெகோவா தமது ஊழியக்காரனாகிய தாவீதுக்கும் தமது மக்களாகிய இஸ்ரவேலுக்கும் செய்த எல்லா நன்மைக்காகவும் சந்தோஷப்பட்டு மனமகிழ்ச்சியோடு தங்களுடைய வீடுகளுக்குப் போனார்கள்.
Introduction
1 Kings 8
The building and furniture of the temple were very glorious, but the dedication of it exceeds in glory as much as prayer and praise, the work of saints, exceed the casting of metal and the graving of stones, the work of the craftsman. The temple was designed for the keeping up of the correspondence between God and his people; and here we have an account of the solemnity of their first meeting there. I. The representatives of all Israel were called together (Kg1 8:1, Kg1 8:2), to keep a feast to the honour of God, for fourteen days (Kg1 8:65). II. The priests brought the ark into the most holy place, and fixed it there (Kg1 8:3-9). III. God took possession of it by a cloud (Kg1 8:10, Kg1 8:11). IV. Solomon, with thankful acknowledgments to God, informed the people touching the occasion of their meeting (Kg1 8:12-21). V. In a long prayer he recommended to God's gracious acceptance all the prayers that should be made in or towards this place (v. 22-53). VI. He dismissed the assembly with a blessing and an exhortation (Kg1 8:54-61). VII. He offered abundance of sacrifices, on which he and his people feasted, and so parted, with great satisfaction (Kg1 8:62-66). These were Israel's golden days, days of the Son of man in type.
Cross-references: 1Kgs 8:1 · 1Kgs 8:2 · 1Kgs 8:65 · 1Kgs 8:3 · 1Kgs 8:10 · 1Kgs 8:11 · 1Kgs 8:12 · 1Kgs 8:54 · 1Kgs 8:62